தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 7 லட்சத்து 94 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வுக்காக 3 ஆயிரத்து 302 மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் 21 ஆயிரத்து 875 பேர் உட்பட மொத்தமாக 7 லட்சத்து 94 ஆயிரத்து 75 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 43 ஆயிரத்து 200 பேர் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் உள்ளிட்ட 60 ஆயிரம் பேர் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வுகள் காலை 10.15க்கு தொடங்கி பகல் 1.15 வரை நடக்க உள்ளது. தேர்வு தொடங்கும் முன் மாணவர்களுக்கு 15 நிமிட வினாத்தாள் படிக்கும் நேரம் வழங்கப்படும். அதனால், தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையம் செல்ல வேண்டும் என்றும் ஹால் டிக்கெட் இல்லாமல் மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பள்ளி அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது. தேர்வுகளின் போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighty four − eighty three =

Back to top button
error: