ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை.. முழு விவரங்கள்!
மாஸ்கோ: சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவிருப்பதை மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகை செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
பயணத் திட்டம் மற்றும் முக்கியத்துவம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அதிபர் புதின் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் தங்கியிருந்து பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வார். உக்ரைன் போருக்குப் பிந்தைய உலகளாவிய அரசியல் சூழலில், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான மூலோபாய, வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் புதிய இலக்குகளை நோக்கி நகர்ந்து வரும் வேளையில் புதினின் இந்த வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஓராண்டிற்குள் இரண்டாவது முறை வருகை
கடந்த 2022-ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்த பிறகு, சர்வதேசப் பயணங்களைச் சுருக்கிக் கொண்ட அதிபர் புதின், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக முதன்முறையாக டெல்லிக்கு வந்திருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவுகளை அடுத்தகட்டத்திற்கு எடுகச் செல்வது குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தினார். அதற்கு முன்பு அவர் 2021-ல் இந்தியா வந்திருந்தார்.
தற்போது, கடந்த டிசம்பர் மாதப் பயணத்தைத் தொடர்ந்து, ஓராண்டிற்கும் குறைவான இடைவெளியில் இரண்டாவது முறையாக புதின் இந்தியாவுக்கு வரவிருப்பது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான நட்புறவை வெளிப்படுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நீண்டகாலமாக ஒரு தனித்துவமான பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இரு நாடுகளின் தலைவர்களும் ஆண்டுக்கு ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வருடாந்திர உச்சிமாநாடு ஒரு வருடம் இந்தியாவிலும், அதற்கு அடுத்த வருடம் ரஷ்யாவிலும் மாறி மாறி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி பிரிக்ஸ் மாநாட்டின் மையப்புள்ளி
இந்தியாவின் தலைமையில் டெல்லியில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த மதிப்புமிக்க 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் உலகளாவிய பாதுகாப்புச் சவால்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், மாற்று வர்த்தக நாணயக் கொள்கை போன்ற மிக முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்துத் தலைவர்கள் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
இம்மாநாட்டின் இடையே பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் ஆகியோருக்கு இடையே தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்புகள் இருப்பதாகத் டெல்லி ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துக்கள்