தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து வருகிறது. மழை காரணமாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் கீழ்கோத்த கிரியில் நட்டக்கல் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.
இதனால் ஆதிவாசி மக்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை அருகே 2வது வளைவில் பெரிய அளவில் மண் மற்றும் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. அதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னுர் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 24) விடுமுறை விடுவதாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார்.