தமிழகத்தில் பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (23-11-2023) முதல் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (23-11-2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இன்று நடைபெறவுள்ள உயர்கல்வி வகுப்புகளுக்கான பருவப் பரீட்சைகள் வேறு சில தினங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.