
மகாலக்ஷ்மி என்பவள் செல்வத்திற்கும், தனத்திற்கும், ஐஸ்வர்யத்திற்கும் உரிய கடவுள். ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மனைவியான இவர் “திருமகள்” என்றும் போற்றப்படுகிறாள். தீபாவளியும், சரத் பூர்ணிமா என்கிற கொஜகிரி பூர்ணிமா என்கிற பண்டிகைகள் மஹா லக்ஷ்மிக்கு பூஜை செய்யும் வகையில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
மகாலக்ஷ்மி ஸ்லோகத்தினால் என்ன நன்மை
ஒரு ஊரில் ஒரு ஏழை பிராமண தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள். வறுமை அவர்களை வாட்டிய நிலையில் நான்கு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகுந்த இன்னல்களுக்கிடையே போராடிக் கொண்டிருந்தார்கள். நான்கு பெண் குழந்தைகளை எப்படி படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுக்கப் போகிறோம் என்ற அச்சம் அவர்களை அல்லும் பகலும் வாட்டியது. உண்ண உணவு, உடுத்த உடை கூட இன்றி வறுமையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமெனக் கழிந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் ஒரு நாள் அவர்களது வீட்டிற்கு ஒரு துறவி யாசகம் கேட்டு வர, அந்தத் தம்பதிகள் என்ன செய்வது என்று புரியாமல் ஐயோ! நம் வீட்டில் எதுவும் இல்லையே இவருக்கு பிக்க்ஷையிட என்று கலங்கி நிற்க அந்தத் துறவி அவர்களைப் பார்த்து உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. உங்கள் நிலைமை மாற வேண்டுமானால் நான் சொல்லவதை செய்வீர்களா? என்றார். அதற்கு அந்த தம்பதிகள் என்ன செய்ய வேண்டும் சுவாமி எங்களால் முடியுமானால் நிச்சயம் செய்கிறோம் என்று கூறினார்கள். அப்போது அந்தத் துறவி அவர்களைப் பார்த்து “நீங்கள் தினமும் காலையிலும், மாலையிலும் நான் சொல்லும் இந்த மந்திரமான
“ஓம்,
ஸ்ரீம்,
ஹ்ரீம்,
க்லீம்,
மகாலக்ஷ்மி,மகாலக்ஷ்மி,
யேகி,யேகி,
சர்வ சௌபாகியமே
தேகி ஸ்வாஹா”
மகாலக்ஷ்மி மந்திரத்தை 108 முறை பக்தியுடன் சொல்லி வாருங்கள்.
அப்படிச் சொன்னால் உங்களுக்கு அந்த மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் கிடைக்கும். உங்கள் வறுமை நீங்கும்” நான் சில காலம் கழித்து வருகிறேன். என்று கூறிவிட்டுச் சென்று விடுகிறார்.
அந்தத் துறவியின் அறிவுரைப்படி பிராமணரின் மனைவி தினமும் என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வந்தாள். அந்தத் துறவி கூறியது போல் அவர்கள் வீட்டில் மகாலக்ஷ்மி கடாக்ஷம் பெருகி அவர்களது நான்கு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து மிகுந்த செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்தத் துறவி மீண்டும் வந்து அவர்களின் வாசலில் நிற்க, அந்த தம்பதிகள் அவரது காலில் விழுந்து வணங்கி, அவரை உள்ளே அழைத்து வந்து விருந்து உபசரித்து, சுவாமி! நீங்கள் கூறியது போல் அந்த மகாலக்ஷ்மி ஸ்லோகத்தை நான் விடாமல் தினமும் சொல்லி வருகிறேன். இப்பொழுது நாங்கள் செல்வச் செழிப்போடும், மிகுந்த சந்தோஷத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார்கள். துறவியும் அவர்களை ஆசீர்வதித்துச் சென்றார்.
மகாலக்ஷ்மியின் பூரண கடாக்ஷத்தைப் பெற:
இன்றைய காலகட்டத்தில் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் வருவதால் செல்வத்தைக் கட்டிக் காப்பது அவசியம். இப்படிப்பட்ட நிலைமையில் நாம் இவ்வாறு மகாலக்ஷ்மியின் மந்திரத்தைச் சொல்லி வருவோமானால் நம் வீட்டில் மகாலக்ஷ்மி குடி கொண்டு அனுக்ரஹம் செய்வாள். செல்வத்தை வரவழைக்கவும், வந்த செல்வத்தை தக்கவைத்துக் கொள்ளவும் இந்த மந்திரத்தை சொல்லி நல்ல பல செல்வங்களைப் பெற்று வாழுவோமாக.
இந்த மந்திரத்தை சொல்வதனால் நாம் மகாலக்ஷ்மியின் பூரண கடாக்ஷத்தைப் பெற்று வாழலாம். தினமும் சொல்லி வருவதால் பல நன்மைகள் உண்டாகும்.
மகாலக்ஷ்மி மந்திரத்தை சொல்லும் முறை:
இந்த மகாலக்ஷ்மி மந்திரத்தை மிகவும் கவனமாக, உடலும் உள்ளமும் சுத்தமாக வைத்து பூஜை அறையில் உட்கார்ந்து, யாரிடமும் பேசாமல், கண்களை மூடிக்கொண்டு மகாலக்ஷ்மியை மனதில் நினைத்து 108 முறை சொல்லவேண்டும். மகாலக்ஷ்மிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு, வீடு முழுவதும் சாம்பிராணி, தூபம் போட்டு, குத்து விளக்கு ஏற்றி பின்பு கிழக்கு திசை நோக்கி அமர்ந்து இதைச் சொல்வது நல்ல பலனைத் தரும்.