தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். பின்னர், பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கினார்.
பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அறிவிப்புகள்
- 2022-23ம் ஆண்டில் 95.39 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன பெற்ற பயிர் பரப்பாக உயர்ந்துள்ளது.
- கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- தென் மாவட்டங்களில் பெருமழையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவில் 208.20 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
- பயிர் இழப்பீடு தொகையாக 25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,436 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
- 2024-25ம் ஆண்டில் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
- முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ், களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி ஒதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
- 2023-24ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 10 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கை வழங்கிட ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும். நிரந்தர மண்புழு உரத்தொட்டி, உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.
- தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- பயிற்சி பெற்ற பண்ணைமகளிர் சுய உதவிக்குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்துடன் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- கோவையில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்காக ஆய்வகம் அமைக்கப்படும்.
- நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க 27.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பலாவில் உள்ளூர், புதிய ரகங்களின் சாகுபடி, பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்க 1.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வாழை பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக 12.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- 32.90 கோடி ரூபாய் மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
- வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத்தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதிபாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓட்டைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறான அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.