தமிழகத்தில் சுட்டெரிக்கும் கத்தரி வெயில்: சென்னை, திருத்தணி உட்பட 7 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டிப் பதிவு! அனல் காற்றால் மக்கள் அவதி!
சென்னை: தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாகக் கோடை மழை பெய்து ஓரளவுக்குக் குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாகப் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அனல் காற்று வீசி வருவதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
7 நகரங்களில் சதம் அடித்த வெயில்
இந்த நிலையில், தமிழகத்தின் முக்கிய 7 நகரங்களில் கோடை வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துளளது. அக்னி நட்சத்திரக் காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வெயிலின் அளவு உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வெப்ப நிலை விவரங்கள்:
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளத் தரவுகளின்படி, அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ள நகரங்களின் பட்டியல் வருமாறு:
திருத்தணி: தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக இங்கு 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது.
சென்னை (மீனம்பாக்கம்): தலைநகர் சென்னையின் புறநகர்ப் பகுதியான மீனம்பாக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை (நுங்கம்பாக்கம்): நகர்ப்புறப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி அனல் காற்றை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் & திருச்சி: இந்த இரு முக்கிய நகரங்களிலும் தலா 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
ஈரோடு & மதுரை விமான நிலையம்: தென் தமிழகத்தின் மையப்பகுதியான மதுரையின் விமான நிலையப் பகுதி மற்றும் கொங்கு மண்டலத்தின் ஈரோட்டிலும் தலா 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டு வெயில் சதம் அடித்துள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காலை 11 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்குவதால், மதிய வேளைகளில் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகின்றன. அனல் காற்றின் காராணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானக் கடைகளை நோக்கித் தஞ்சமடைந்து வருகின்றனர்.
0 கருத்துக்கள்