சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பெரிய அளவில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று முன்தினம் முதல் செயல்படத் தொடங்கியது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ரூ.20 முதல் ரூ.35 வரை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 32 கி.மீ தொலைவில் உள்ளதால் அதற்கேற்ப கட்டணம் குறைக்கப்படுகிறது.
அதன்படி, கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்லும் அரசு விரைவு பேருந்தில் அதிகபட்சமாக ரூ.460 வசூலிக்கப்படும் நிலையில், அதே பேருந்தில் கிளாம்பாக்கிலிருந்து அதிகபட்சமாக ரூ.430 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.