
சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள், லேசர் லைட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் அருகே விமானங்கள் தரையிறங்கும் போது லேசர் லைட் அடிக்கடி ஒளிரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளிரச் செய்தால், விமானிக்கு பாதிப்பு ஏற்பட்டு விமானம் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 2 வாரங்களில் சென்னையில் விமானங்களில் 3 முறை லேசர் லைட் ஒளிரச் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், சென்னை விமான நிலையம் அருகே லேசர் லைட் மற்றும் பலூன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி லேசர் லைட் மற்றும் பலூன்களைப் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.