
சென்னை, செப்டம்பர் 26 – ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) மொத்தம் 3,190 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் காலாண்டு விடுமுறையையும் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 565 பேருந்துகளும், திங்கட்கிழமை 190 பேருந்துகளும், செவ்வாய்க்கிழமை 885 பேருந்துகளும் இயக்கப்படும். இன்று, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு 790 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேட்டில் இருந்து, இன்று மற்றும் நாளை 215 பேருந்துகளும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் 185 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக, அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பணி இடங்களுக்குத் திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.