தமிழகத்தில் அனல் பறக்கும் 4 முனைப் போட்டி: சென்னையில் 2 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி – முழு அட்டவணை இதோ!
சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த முறை தேர்தல் களம் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என பலம் வாய்ந்த 4 முனைப் போட்டியைச் சந்திப்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஆதரித்து அந்தந்தக் கட்சித் தலைவர்களும், நட்சத்திரப் பேச்சாளர்களும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளரின் சென்னை விசிட்!
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, தலைநகர் சென்னையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வரும் ஏப்ரல் 8 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை நிலைய அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவரது 2 நாள் சென்னை தேர்தல் பிரசாரப் பயணத்தின் முழு விவரங்கள் இதோ:
ஏப்ரல் 8 (புதன்கிழமை) – பிரசார இடங்கள்:
காலை 9:00 மணி: வேளச்சேரி (காந்தி ரோடு ஜங்ஷன்)
காலை 10:00 மணி: சைதாப்பேட்டை (5 லைட், ஆலந்தூர் ரோடு)
காலை 11:00 மணி: விருகம்பாக்கம் (அருணாச்சலம் ரோடு)
மாலை 4:00 மணி: தியாகராயநகர் (சிஐடி நகர்)
மாலை 5:00 மணி: அண்ணா நகர் (டிபி சத்திரம்)
மாலை 6:00 மணி: வில்லிவாக்கம் (எம்டிஎச் ரோடு)
இரவு 7:00 மணி: கொளத்தூர் (அருள்மிகு லக்ஷ்மியம்மாள் கோயில் அருகில்)
இரவு 8:00 மணி: பெரம்பூர் (அசோக் பில்லர்)
ஏப்ரல் 9 (வியாழக்கிழமை) – பிரசார இடங்கள்:
காலை 9:00 மணி: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி (இருசப்ப தெரு, டாக்டர் நடேசன் சாலை)
காலை 10:00 மணி: ஆயிரம் விளக்கு (கருமாரியம்மன் கோயில், புஷ்பா நகர்)
மாலை 4:00 மணி: ராயாபுரம் (பெரியபாளையத்தம்மன் நகர் அருகில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை)
மாலை 5:00 மணி: துறைமுகம் (அரசு அச்சகம் அருகில், தங்கசாலை)
மாலை 6:00 மணி: திரு.வி.க நகர் & எழும்பூர் (அம்பிகா ஓட்டல் அருகில், புளியந்தோப்பு நெடுஞ்சாலை)
தொண்டர்கள் உற்சாகம்
சென்னையின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய இந்தச் சுற்றுப்பயணம், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலை நேரப் பிரசாரங்கள் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் திட்டமிடப்பட்டுள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்துத் தலைவர்களின் இந்தச் சூறாவளிப் பிரசாரங்களால் தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
0 கருத்துக்கள்