
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் ஏசி மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு ஏசி மின்சார ரயில் சேவை கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில், துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டைச் சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தை அடையும்.
பின்னர் சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். மறுமார்க்கமாக ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தை அடைகிறது. பின்னர் அது சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.35 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். தினமும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இன்று மதியம் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் ஏசி பெட்டி கொண்ட மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.