தமிழக மாவட்ட நீதிமன்றங்களில் புதிய ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ பணியிடங்கள்: அரசு அதிரடி அரசாணை – குரூப்-2A தேர்வு மூலம் நிரப்ப முடிவு!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ (Computer Operator) என்ற புதிய பணியிடத்தைத் தோற்றுவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்தப் புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது, கணினித் துறை பட்டதாரிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசாணையின் முக்கிய அம்சங்கள்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, இந்த ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ பணியிடங்கள் நேரடி நியமன முறை மற்றும் பணிமாற்றல் முறை ஆகிய இரு வழிகளிலும் நிரப்பப்படும். அந்தந்த மாவட்டத்தின் முதன்மை நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதி இப்பணியிடங்களுக்கான பணிநியமன அதிகாரியாகச் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி மற்றும் தட்டச்சுத் திறன்
தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கப் பின்வரும் கல்வித் தகுதிகள் அவசியமாகும்:
முதன்மைத் தகுதி: பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.Sc. CS) அல்லது பி.சி.ஏ. (BCA) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாற்றுத் தகுதி: பி.ஏ., பி.எஸ்.சி., அல்லது பி.காம். பட்டம் பெற்று, அதனுடன் கணினி பயன்பாட்டில் டிப்ளமோ (DCA) முடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.
கூடுதல் தகுதி: அடிப்படை பட்டப்படிப்புடன், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தட்டச்சுத் தேர்வுகளில் (Typewriting) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சம்பளம் மற்றும் தேர்வு முறை
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு அடிப்படைச் சம்பளமாக ரூ. 20,600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-2A (Group-2A) தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு எப்போது?
டி.என்.பி.எஸ்.சி-யின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி (Annual Planner), ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2A பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இதற்கான தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துக்கள்