ஆந்திரா முதலமைச்சர் மீது கல்வீச்சு..!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கல் வீசி தாக்கியதில் ஜெகன் மோகன் ரெட்டி காயமடைந்தார். இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பஸ்சில் இருந்த டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த கல் வீச்சு தாக்குதலில் முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையை நிறுத்தாமல் தொடர்ந்தார். இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அம்மாநில முதலமைச்சர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.