பாதுகாப்பான முதலீடு.. அதிக லாபம்! தபால் அலுவலகத்தின் ‘டாப் 5’ சேமிப்புத் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
சாதாரண மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்யும் போது, முதலாவதாகப் பார்ப்பது அதன் பாதுகாப்பையும், இரண்டாவதாக அதிலிருந்து கிடைக்கும் லாபத்தையும்தான். இந்த இரண்டையும் ஒருசேர வழங்கும் இடமாகத் தபால் அலுவலகங்கள் (Post Office) விளங்குகின்றன. மத்திய அரசின் நேரடி உத்தரவாதம் இருப்பதால், இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை.
தற்போது வங்கிகளை விடக் கூடுதலாக 7% முதல் 8.2% வரை வட்டி விகிதங்களை வழங்கும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான 5 முக்கியத் திட்டங்கள் குறித்து இங்கே காண்போம்.
1. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC)
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்காக 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், குறுகிய கால முதலீட்டிற்குச் சிறந்தது.
வட்டி விகிதம்: 7.5%
முதலீடு: குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை.
கால அளவு: 2 ஆண்டுகள்.
சிறப்பம்சம்: கணக்கு தொடங்கி ஓராண்டிற்குப் பிறகு, அவசரத் தேவைக்காக 40% பணத்தைத் திரும்பப் பெறும் வசதி உண்டு.
2. செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana – SSY)
பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டம், சந்தையில் உள்ள சேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டியை வழங்குகிறது.
வட்டி விகிதம்: 8.2%
தகுதி: 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கலாம்.
முதலீடு: ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம்.
பலன்: 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் சுமார் ரூ. 69.27 லட்சம் வரை பெற முடியும். இதற்கு வருமான வரி விலக்கும் உண்டு.
3. பொது சேமநிதி (Public Provident Fund – PPF)
நீண்ட கால அடிப்படையில் பெரும் தொகையைச் சேமிக்க விரும்புவோருக்கும், வரி விலக்கைத் தேடுபவர்களுக்கும் இது மிகச்சிறந்த தேர்வாகும்.
வட்டி விகிதம்: 7.1%
முதலீடு: ஆண்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 1.5 லட்சம் வரை.
கால அளவு: 15 ஆண்டுகள் (அதன்பின் 5 ஆண்டுக்கால அடிப்படையில் நீட்டித்துக் கொள்ளலாம்).
சிறப்பம்சம்: இதில் ஈட்டப்படும் வட்டி மற்றும் அசல் தொகை என அனைத்துமே வரி விலக்கிற்கு உட்பட்டவை.
4. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS)
ஒரே ஒருமுறை முதலீடு செய்து, அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புவோருக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாகும்.
வட்டி விகிதம்: 7.4%
முதலீடு: தனிநபர் கணக்கில் ரூ. 9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ. 15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம்.
வருமானம்: கூட்டுக் கணக்கு மூலம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ. 9,250 வரை வட்டி வருமானமாகப் பெறலாம்.
5. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
ஓய்வு பெற்றவர்கள் தங்கள் பணத்தை நிலையான வைப்பு நிதிகளை (FD) விட அதிக லாபத்தில் முதலீடு செய்ய இத்திட்டம் உதவுகிறது.
வட்டி விகிதம்: 8.2%
முதலீடு: அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
பலன்: ரூ. 30 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ரூ. 61,500 வட்டியாகக் கிடைக்கும். அதாவது மாதத்திற்குச் சராசரியாக ரூ. 20,500 நிலையான வருமானம் உறுதி செய்யப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
0 கருத்துக்கள்