தெலங்கானா புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு
தெலங்கானா மாநில புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர், அமைச்சர்கள் உள்பட 11 பேர் பதவியேற்றனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள லால்பகதுர் சாஸ்திரி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பட்டி விக்கிரமார்கா மற்றும் அமைச்சர்களாக உத்தம் குமார் ரெட்டி, ஸ்ரீதர் பாபு, பூனம் பிரபாகர், தும்மல நாகேஸ்ரராவ், கொண்டா சுரேகா, கிருஷ்ணா ராவ் உள்ளிட்ட 11 பேரும் பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் பங்கேற்றனர்.