அயோத்தி ராமர் கோயிலில் முதல் நாளில் சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் பால ராமரை தரிசித்தனர்.
நேற்று செவ்வாய்கிழமை காலை ஆறு மணிக்கே ஏராளமான மக்கள் கோவிலில் குவிந்தனர். மதியம் இரண்டு மணி வரை இரண்டரை லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சிறு நெரிசல் ஏற்பட்டது. மதியத்திற்கு பின், பக்தர்களை கட்டுப்படுத்தி, முறையாக தரிசனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இரவு பத்து மணி வரை தரிசனம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம், கோயிலின் நிலைமையை கழுகுப் பார்வையில் (ட்ரோன் காட்சி) பார்த்த முதல்வர் யோகி ஆதித்யநாத், பின்னர் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். பக்தர்கள் சிரமமின்றி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமையும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தரிசனம் சீராக நடைபெற அதிகாரிகளும், காவல்துறையும் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இன்று இரண்டாவது நாளிலும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். அதிகாலையில் இருந்தே ராமரை தரிசனம் செய்வதற்காக குளிரையும் பொருட்படுத்தாமல் கோயிலின் பிரதான வாயிலில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக காலை ஆறு மணி முதல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.