EPFO: இனி UPI மூலம் PF பணம் கிடைக்கும்.. ஏப்ரல் முதல் புதிய சேவைகள்!
புது டெல்லி: இந்திய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனது சுமார் 8 கோடி சந்தாதாரர்களின் நலன் கருதி, பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மொபைல் செயலியை, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டிஜிட்டல் புரட்சி – EPFO 3.0:
தற்போது நடைமுறையில் உள்ள “EPFO 3.0” மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், பிஎஃப் பணத்தைப் பெறுவதற்கான காத்திருப்பு காலம் இனி முடிவுக்கு வருகிறது. இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் பணம் கைக்கு வர பல நாட்கள் ஆகும் நிலை இருந்தது. ஆனால், புதிய தானியங்கி தீர்வு முறையின் மூலம், விண்ணப்பங்கள் எவ்வித மனித தலையீடும் இன்றி பரிசீலிக்கப்பட்டு, வெறும் மூன்றே நாட்களில் பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ஏற்கனவே தானியங்கி தீர்வு வரம்பை 1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக EPFO உயர்த்தியுள்ளது.
UPI மூலம் உடனடிப் பணம்:
இந்த புதிய செயலியின் மிக முக்கிய அம்சமே யுபிஐ (UPI) வசதிதான். உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து தகுதியான தொகையை, தங்களின் UPI PIN-ஐப் பயன்படுத்தியே உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற அவசரத் தேவைகளுக்காக நிதி தேவைப்படும்போது, இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இந்த முறையில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருவர் எவ்வளவு தொகை எடுக்கத் தகுதியானவர் என்பது செயலியிலேயே தெளிவாகத் தெரியும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், ஊழியர்களின் எதிர்கால ஓய்வூதியப் பாதுகாப்பிற்காக மொத்த இருப்பில் 25 சதவீதம் எப்போதும் கணக்கிலேயே இருக்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டம் மற்றும் பாதுகாப்பு:
தற்போது இந்த புதிய தொழில்நுட்பத்தை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 100 சோதனை கணக்குகளைக் கொண்டு பரிசோதித்து வருகிறது. இதில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்ட பின்னரே இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். ஆண்டுதோறும் சுமார் 5 கோடி கோரிக்கைகளைச் செயல்படுத்தும் EPFO மீதான பணிச்சுமையைக் குறைத்து, வங்கிகளுக்கு இணையாக வேகமான சேவையை வழங்குவதே இந்த மாற்றத்தின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய செயலி பயன்பாட்டிற்கு வந்தாலும், இதர பணிகளுக்காக தற்போதுள்ள UMANG செயலி மற்றும் EPFO இணையதளம் தொடர்ந்து செயல்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துக்கள்