நாடு முழுவதும் இதுவரை ரூ.4,650 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்!!
நாடு முழுவதும் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் ரூ.4,650 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களில் 45 சதவீதம் போதைப்பொருள் என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.