தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியுமான பாத்திமா பீவி காலமானார். வயது முதிர்வு காரணமாக அவர் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். அவருக்கு வயது 96.
இந்நிலையில், அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியுமான பாத்திமா பீவியின் மறைவுச் செய்தி கேட்டு வருத்தமடைகிறேன். உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர்பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.