கென்யாவில் கனமழை.. அணை உடைந்ததில் 45 பேர் பலி..!
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பேரழிவை உருவாக்கியுள்ளது.
மேற்கு கென்யாவின் மை மஹியு பகுதியில் உள்ள பழமையான கிசாபே அணை அதிக நீர்வரத்து காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இதனால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.
இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் காரணமாக 2 லட்சம் பேர் உள்ளூர் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால விடுமுறையை மீண்டும் அரசு நீட்டித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆப்பிரிக்காவின் மற்றொரு நாடான தான்சானியாவில் கனமழை பேரழிவை உருவாக்கியது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அந்நாட்டில் ஏற்கனவே 155க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.