நாடாளுமன்ற தேர்தலை அடுத்து, தமிழகத்தில் வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது, 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 348, பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 294 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. அதில், 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல், குறைந்த வாக்காளர்களின் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தமாக ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.