உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. பல ஆண்டுகள் நடந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் எழுந்துள்ளது. கும்பாபிஷேக தினத்தன்று சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 23ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தெற்கு ரயில்வே வாரியம் ஆனது தமிழகத்திலிருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய நகரங்களில் இருந்து குறைந்த கட்டணத்தில் அயோத்திக்கு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாகவும், ரயில்கள் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெற்கு ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.