தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி ஜனவரி 2வது வாரத்தில் சட்டசபை கூடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் பயணம் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் காலை 10:00 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நிமிடத்தில் தன் உரையை நிறைவு செய்தார். 2 நிமிடத்தில் தனது உரையை முடித்துக் கொண்ட ஆளுநர், அதில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருப்பதால் முழுமையாக படிக்க விரும்பவில்லை என்றார்.
இதன்பின் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர், ஆளுநர் உரை சட்டப் பேரவை மரபுகளுக்கு எதிரானது என்று கூறிய அவைத் தலைவர் துரைமுருகன், ஆளுநர் உரையை வாசிக்காவிட்டாலும் அதை முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். இதன்படி அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சட்டப் பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அரசு உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.