குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மாவட்ட பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 16ம் தேதி இரவு முதல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் தென் மாவட்டங்கள் வெள்ள நீரில் சிக்கி தவித்து வருகின்றன.
ஓராண்டில் பெய்யக்கூடிய மழை கடந்த 2 நாட்களில் கொட்டி தீர்த்து இருக்கிறது. இந்த சூழலில் நேற்று காலையில் இருந்து மழை ஓரளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளநீர் சற்று வடிய தொடங்கியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் தென் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த வளிமண்டல மேலடுக்கு தற்போது லட்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீடிக்கிறது.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.