ஐசிசி மகளிர் உலகக் கோப்பை: வெற்றி பெறும் அணிக்கு ₹39.55 கோடி பரிசுத் தொகை!
வரவிருக்கும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில், வரலாற்றில் இல்லாத வகையில் அதிகபட்ச பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை, முந்தைய ₹11.65 கோடியிலிருந்து, கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்து, ₹39.55 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த 13-வது மகளிர் உலகக் கோப்பை தொடர், செப்டம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில், 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகை, முந்தைய பதிப்பை விட கிட்டத்தட்ட 300% அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ₹122.5 கோடி ($13.88 மில்லியன்). இது, நியூசிலாந்தில் 2022-ல் நடைபெற்ற முந்தைய பதிப்பை விட, 297% அதிகம். இந்த உயர்வு, 2023-ல் நடைபெற்ற ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையின் பரிசுத் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் சுமார் ₹88.26 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹19.77 கோடி ($2.24 மில்லியன்) பரிசு வழங்கப்படும். இது, முந்தைய பதிப்பில் வழங்கப்பட்ட ₹5.30 கோடியை விட 273% அதிகம்.
அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ₹9.89 கோடி கிடைக்கும். 2022-ல் அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை ₹2.65 கோடி மட்டுமே வழங்கப்பட்டது.
குரூப் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு ₹30.29 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும், 5-வது மற்றும் 6-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹62 லட்சம் பரிசு வழங்கப்படும். 7-வது மற்றும் 8-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹24.71 லட்சம் பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ₹22 லட்சம் வழங்கப்படும்.
இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள், இந்தியாவின் குவஹாத்தி, இந்தூர், நவி மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் கொழும்பு ஆகிய ஐந்து இடங்களில் நடைபெற உள்ளன. பாகிஸ்தான் அணி, கொழும்பில் தனது போட்டிகளில் விளையாடும்.
“பெண்கள் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்” என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்தார்.
0 கருத்துக்கள்