வெந்தயக் குழம்பு இப்படி செய்தால் சுவையோ சுவை!
வெந்தயக் குழம்பு எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம்- ஒரு தேக்கரண்டி
மிளகு- ஒரு தேக்கரண்டி
சீரகம்- ஒரு தேக்கரண்டி
அரிசி- ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- ஒரு கப்
தக்காளி- இரண்டு
வரமிளகாய்- மூன்று
புளிக்கரைசல்- ஒரு கப்
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- அரை தேக்கரண்டி
கடுகு- அரை தேக்கரண்டி
கருவேப்பிலை- இரண்டு இணுக்கு
மிளகாய்த்தூள், எண்ணெய், தண்ணீர், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் வெந்தயம், மிளகு, சீரகம், அரிசி போன்றவற்றை சேர்த்து எண்ணெய் ஏதும் ஊற்றாமல், வெறுமையாக வறுத்தெடுக்க வேண்டும். பின் அதை பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதே கடாயில், எண்ணெய் சேர்க்க வேண்டும். அதன் பிறகு, கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்க்க வேண்டும். இதற்கு அடுத்ததாக, அவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு துண்டுகளாக வெட்டிய தக்காளிகளை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி வதங்கியவுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் நாம் வறுத்து அரைத்த பொடியையும் சேர்த்து கலந்துவிட வேண்டும். பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்ததும் அதில், புளிக்கரைசல் சேர்த்து கலந்துவிட வேண்டும். பின்பு 5 முதல் 8 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைத்து, மல்லித்தழை சிறிதளவு தூவி இறக்கினால் சூடான சுவையான வெந்தயக் குழம்பு தயார். வடித்த சோறும் வெந்தயக் குழம்பும் என்றும் சிறந்த இணை.
குழந்தைகளுக்கு மதிய உணவு சாதமாக கிளிறி கொடுக்க வேண்டுமென்றால், அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.