சுவையான கறிவேப்பிலை சட்னி – வெறும் 5 நிமிடங்களில் செய்யலாம் வாங்க!
இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் கறிவேப்பிலை சட்னியை இப்படி எளிமையான முறையில் செய்வது என்று பாருங்கள் மற்றும் அதன் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்..
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 1/2 ஸ்பூன்
சீரகம் – சிறிதளவு
உளுந்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 5
வேர்க்கடலை – சிறிதளவு (வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
பெருவெங்காயம் – ஒரு சிட்டிகை
தேங்காய் – 3 கீறல்
கருவேப்பிலை – 2 கொத்து (தண்ணீரில் நன்கு அலசியது)
புளி – சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு
உளுந்தம் பருப்பு
காய்ந்த மிளகாய் – 1
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பிறகு அவற்றில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
பொன்னிறமாக வரும் போது காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயம், பூண்டு, வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.
பின்னர், பெருங்காயம் மற்றும் தேங்காய் புளி சேர்த்து வதக்கவும். அலசி வைத்த கறிவேப்பிலையை சேர்க்கவும். கறிவேப்பிலை ஓரளவு வதங்கிய பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
இவற்றை அப்படி சில நிமிடங்களுக்கு நன்றாக ஆற வைத்துக்கொள்ளவும். அவை நன்றாக ஆறிய பின்னர் அவற்றை மிக்சியில் இட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
இவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அவற்றுடன் தாளிப்பை சேர்த்தால் சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி. இந்த கறிவேப்பிலை சட்னியை இட்லி, தோசை, தயிர் சாதம், சூடான சாதத்துடன் சேர்த்து ருசிக்கலாம்.
கருவேப்பிலை நன்மைகள்:
கருவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் குறைக்க உதவுகிறது. மூளை சிறந்த முறையில் செயல்பட வேண்டுமெனில் தினமும் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும்.
வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது. குடல் இயக்கத்திற்கு உதவ, காலையில் வெறும் வயிற்றில் சில பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம்.