ஆன்மீகம்

தீராத நோயையும் தீர்க்கும் மருந்தீஸ்வரர் கோவில்!

மருந்தீஸ்வரர் கோவில்: தீராத நோயையும் தீர்க்கும் மருத்துவர்
அந்த இடத்துக்குப் போனதுமே ஏதோ ஒரு விசேஷத்தை உணரலாம். கடற்கரையிலிருந்து வரும் தூய்மையான காற்று, சுற்றிலும் சூழ்ந்துள்ள மரங்களின் சுகமான தாலாட்டு, நகரின் சந்தடிகளிலிருந்து ஒதுங்கியிருக்கும் அந்த இடத்தின் அமைதி.. மருந்தீஸ்வரர் என்பது அந்தக் கோவிலுக்குப் பொருத்தமான பெயர் தான். அந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்றாலே உடலும் மனமும் ஆரோக்கிய மாவதுபோல் உணரலாம். கிட்டத்தட்ட 1 ஏக்கர் பரப்பளவில் மரங்களின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் அமைதியான சூழ்நிலையும் பழமை மாறாத அதன் தன்மையும் சிவ தரிசனத்தை மேலும் விசேஷமான அனுபவமாக்குகின்றன.

Marundeeswarar Temple i

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள இக்கோவில் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழம் பெருமை உடையது. ஏழாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட தாகக் கருதப்படுகிறது. இக்கோவிலில் சிவன் மருந்தீஸ்வரராகவும் பார்வதி திரிபுரசுந்தரியாகவும் வீற்றிருக்கிறார்கள். இந்தக் கோவில் உருவான கதையே இதன் மருத்துவ குணத்தைப் பறைசாற்றுகிறது.

ஒரு முறை அகத்தியர் இத்தலத்தின் வழியாக பயணிக்கும்போது தலத்தின் மகிமை உணர்ந்து இங்கிருக்கும் குளத்தில் நீராடிப் பின்னர் சிவனை வேண்டினாராம். அவர் முன்னால் சிவன் காட்சியளித்ததும் அவரிடம் உலகில் தோன்றியுள்ள நோய்களையும் அதைத் தீர்க்கும் வழிமுறைகளையும் கேட்டார் அகத்திய முனி. நோய் தீர்க்கும் முறைகளையும் அதற்கான மூலிகைகளையும் சிவன் விளக்கினாராம். ஈசனின் விளக்கங்களைக் கேட்டு மகிழ்ந்த அகத்தியர் நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பற்றி உபதேசித்ததால் சிவனுக்கு மருந்தீஸ்வரர் என்று வழங்கப்பட வேண்டுமென்றும் இங்கே வந்து அவரது திருவடிகளை வணங்குபவர்கள் நோயற்ற வாழ்வைப் பெற வேண்டுமென்றும் வரம் கேட்டுப் பெற்றாராம்.

இதனால்தான் இங்குள்ள சிவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் வந்தது. இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் இக்கோவிலுக்கு வந்து சிவனைத் தரிசித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். இக்கோவிலின் தல விருட்சம் வன்னி மரம். இந்த வன்னி மரத் தருகேதான் ஈசன் இரு முறை தோன்றியுள்ளார். திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு ஒரு முறையும், நடனமாடும் நிலையில் வால்மீகி முனிவருக்கு ஒரு முறையும் காட்சியளித்துள்ளதாக ஐதீகம்.

வால்மீகி முனிவர் இக்கோவிலுக்கு வந்து தரிசித்ததால் இவ்வூருக்குத் திருவால்மீகியூர் என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் இப்பெயர் மருவி திருவான்மியூர் என்றானது. வால்மீகி நகர் என்ற பகுதி இப்போதும் இங்கு உள்ளது. இந்தக் கோவிலில் சிவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் தவிர பால்வண்ணநாதன் ஔஷதீஸ்வரர் (ஔஷதம் என்றால் வட மொழியில் மருந்து என்று பொருள்) என்ற பெயரும் உள்ளன.

பங்குனி பிரம்மோற்சவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, போன்ற விழாக்கள் இங்கு விஷேசமாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கே அமைந்துள்ள ஆன்மீக நூலகத்தில் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் உள்ளன. சுவாமிக்குப் பாலாபிஷேகம் செய்து விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்களும் தீரும் என்பது இக்கோவிலை ஒட்டியுள்ள அழுத்தமான நம்பிக்கை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: