விளம்பரம்

ஒரு கிலோ ரூ.9 கோடி! குடிப்பதற்கல்ல, பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும் – உலகின் அதிஅற்புத ‘டா ஹாங் பாவ்’ தேநீர்!

பெய்ஜிங்: இந்தியாவில் தேநீர் என்பது வெறும் பானம் மட்டுமல்ல, அது பெரும்பாலான மக்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு உணர்வாகும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் தினமும் தேநீர் அருந்துகின்றனர். சாதாரணமாக இந்தியாவில் ஒரு கிலோ தேயிலை 100 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், ஒரு கிலோவின் விலை பல கோடிகளைத் தொடும் ஒரு அதிசய தேநீர் உலகில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், சீனாவின் தேசியப் புதையலாகக் கருதப்படும் “டா ஹாங் பாவ்” (Da Hong Pao) என்ற தேநீர்தான் அது.

விலை ரூ. 9 கோடி! 20 கிராம் ரூ. 26 லட்சம்!

உலகிலேயே மிக அரிதான மற்றும் அதிக விலையுயர்ந்த தேயிலையாக மகுடம் சூடியுள்ளது இந்த டா ஹாங் பாவ். இதன் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ஒரு கிலோவிற்குச் சுமார் ரூ. 9 கோடி ஆகும். இதன் மதிப்பை உணர்த்தும் வகையில், கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலம் ஒன்றில், வெறும் 20 கிராம் எடையுள்ள இந்தத் தேயிலை ரூ. 26 லட்சத்திற்கு ஏலம் போனது பெரும் வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இது எங்கு விளைகிறது?

இந்த அரிய வகை தேயிலைச் செடிகள், சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற வூயி (Wuyi) மலைகளில் மட்டுமே வளர்கின்றன.

இப்பகுதி முழுவதும் பாறைகளும் குன்றுகளும் நிறைந்து காணப்படுவதால், கனிமச் சத்துக்கள் (Minerals) நிறைந்த மண் இங்குள்ளது.

பாறைகளின் இடுக்குகளிலும் பிளவுகளிலும் இந்தத் தேயிலைச் செடிகள் இயற்கையாக வளர்வதால், இதனை அங்குள்ள மக்கள் செல்லமாக “பாறைத் தேநீர்” (Rock Tea) என்றும் அழைக்கிறார்கள்.

இவ்வளவு விலையுயர்ந்ததாக இருக்கக் காரணம் என்ன?

டா ஹாங் பாவ் தேயிலை, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான “தாய்ச் செடிகளிலிருந்து” (Mother trees) பறிக்கப்படுகிறது. தற்போது இந்தத் தொன்மையான மரங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளன.

இந்த அபூர்வ மரங்களைப் பாதுகாக்க நினைத்த சீன அரசாங்கம், கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தத் தாவரங்களில் இருந்து இலைகளைப் பறிக்க (அறுவடை செய்ய) கடுமையான தடை விதித்தது.

இதன் காரணமாக, உண்மையான மற்றும் அசல் டா ஹாங் பாவ் தேயிலை இப்போது உலகச் சந்தையில் கிடைப்பதே இல்லை. இதன் ஒரு கிராம் தேயிலையின் மதிப்பு சுமார் ரூ. 1.5 லட்சத்திற்கும் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

‘பெரிய சிவப்பு அங்கி’ – பெயரின் பின்னால் உள்ள சுவாரசிய வரலாறு

சீனாவை ஆண்ட மிங் வம்சத்தின் (Ming Dynasty) காலத்தில், பேரரசர் ஒருவரின் தாயார் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்தார். அப்போது இந்த அரிய வகை தேநீரைக் குடித்த பிறகு அவர் அதிசயத்தக்க வகையில் முழுமையாகக் குணமடைந்தார். இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த பேரரசர், அந்தத் தேயிலையைத் தந்த செடிகளுக்கு அரச மரியாதையைச் செலுத்தும் விதமாகத் தனது ‘பெரிய சிவப்பு அங்கி’யைப் போர்த்தி கௌரவித்தார். அன்று முதல் இந்தத் தேநீருக்குச் சீன மொழியில் “டா ஹாங் பாவ்” (பெரிய சிவப்பு அங்கி) என்ற பெயர் நிலைத்துவிட்டது.

மண் வாசனையும் தனித்துவமான சுவையும்

வூயி மலையின் பாறைக் கனிமங்களை உறிஞ்சி வளர்வதால், இந்தத் தேநீர் ஒருவித மண் வாசனையுடனும் (Earthy flavor) லேசான இனிப்புச் சுவையுடனும் திகழ்கிறது. இதனைப் பருகிய பிறகும் அதன் தனித்துவமான நறுமணமும் சுவையும் நீண்ட நேரம் வாயில் நிலைத்திருக்கும் என இதனை ருசித்த அதிர்ஷ்டசாலிகள் விவரிக்கின்றனர்.

பகிர்வு:

0 கருத்துக்கள்

கருத்து தெரிவிக்க

Are you human? Please solve:Captcha


அறிவிப்புகள் 0
விளம்பரம்
விளம்பரம்
error: