ஏழுமலையான் பக்தர்களுக்கு நற்செய்தி: மே மாத தரிசன டிக்கெட் வெளியீட்டு தேதிகளை அறிவித்தது தேவஸ்தானம்!
திருப்பதி: உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் மே மாதம் சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ள பக்தர்களுக்காக, தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறை முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக இந்த முன்பதிவுகள் ஆன்லைனில் தொடங்குகின்றன.
ஆர்ஜித சேவைகள் மற்றும் குலுக்கல் முறை
மே மாதத்திற்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற கட்டண சேவைகளுக்கான (Arjitha Sevas) ஆன்லைன் குலுக்கல் பதிவு பிப்ரவரி 18-ம் தேதி தொடங்குகிறது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு மட்டுமே இந்த சேவைகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். இதற்கான பதிவுகளை பக்தர்கள் தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.
ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள்
பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற ரூ.300 சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள் (Special Entry Darshan), பிப்ரவரி 24-ம் தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. கோடை விடுமுறை காலம் என்பதால், இந்த டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்றுத் தீர வாய்ப்புள்ளதால் பக்தர்கள் முன்கூட்டியே தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய தேதிகள் மற்றும் முன்பதிவு விவரங்கள்:
பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள கால அட்டவணை இதோ:
பிப்ரவரி 18 – சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான குலுக்கல் பதிவு தொடக்கம்.
பிப்ரவரி 23 – மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக தரிசன டோக்கன்கள்.
பிப்ரவரி 24 – ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் (காலை 10:00 மணி).
பிப்ரவரி 24 – திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் அறை முன்பதிவு (மதியம் 3:00 மணி).
பக்தர்களுக்கு வேண்டுகோள்
தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறை முன்பதிவுகளை மேற்கொள்ளும் பக்தர்கள், தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான (https://ttdevasthanams.ap.gov.in) என்ற முகவரியை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். போலி இணையதளங்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துக்கள்