திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

By Web Admin |
Advertisement

தூத்துக்குடி: கோவில்பட்டி திமுக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ஜீ.வி.மார்க்கண்டேயன் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கா.கருணாநிதி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தை கடந்த 18-ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடத்தினார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கீதாஜீவன், தலைமைக் கழகப் பேச்சாளர் சூர்யா வெற்றிகொண்டான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ-வின் சர்ச்சைப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் திரண்டனர். பின்னர், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது.

Advertisement

புகாரின் அடிப்படையில், விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் தலைமையிலான போலீஸார், இன்று காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர்.

எம்.எல்.ஏ கைதான தகவல் அறிந்து அவரது வீட்டின் முன் திரண்ட திமுகவினர், தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டபடி காவல்துறையின் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ மார்க்கண்டேயனிடம் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement