இனி வீட்டிலேயே சுவையான வட பாவ் செய்யலாம்!

 

வட பாவ் வெளியில் சாப்பிட்டு இருப்பீர்கள், ஆனால் வீட்டிலே மிகவும் சுவையாக செய்யலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு இது தாறுமாறான வட பாவ்.

தேவையான பொருட்கள்:

 

உருளைக்கிழங்கு -மூன்று

கடலை மாவு – ஒரு கப்

 

அரிசி மாவு – மூன்று மேசைக்கரண்டி

பன் (bun) – நான்கு

 

வேர்க்கடலை – மூன்று மேசைக்கரண்டி

கொத்தமல்லித்தழை – இரண்டு கொத்து

கருவேப்பிலை – இரண்டு கொத்து

மஞ்சள் தூள் – அரைத்த தேக்கரண்டி

பச்சை மிளகாய் – இரண்டு

காய்ந்த மிளகாய்- ஒன்று

தேங்காய்த் துருவல் – இரண்டு தேக்கரண்டி

புளி- சிறிய உருண்டை

இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி

கடுகு – கால் தேக்கரண்டி

எள்ளு – கால் தேக்கரண்டி

உப்பு எண்ணெய் தண்ணீர் தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு கடுகு, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்கிய பின், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.

பின்பு மிகப் பெரிதாகவும் இல்லாமல் மிகச் சிறிதாகவும் இல்லாமல் சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இதை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உருண்டைகளைப் பொறித்து எடுக்க கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள், எள்ளு, போன்றவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதம் வரும் வரை நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு உருளைக்கிழங்கு உருண்டைகளை எடுத்து மாவில் தொய்த்து எண்ணெய்யில் பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீதம் உள்ள மாவினை எண்ணெயில் சாதரணமாக கைகளால் அப்படியே தூவி மிச்சர் போல் பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வேர்க்கடலை, இரண்டு பல் பூண்டு, புளி, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கடாயில் வறுத்த பின், இதனுடன் பொரித்த சில மிச்சரையும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளலாம்.

இதற்கு சட்னி வேண்டும் என்றால் ஒரு பச்சை மிளாகாய், கொத்தமல்லித் தழை சிறிதளவு, புதினா சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிறகு பன்னை(bun) இரண்டாக வெட்டி அதில் அந்த வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து, பொரித்த உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து அதன்மேல் மிச்சர்கள் சிறிது தூவி விடலாம். பன்னின் இன்னொரு பாதியில் பச்சை சட்னியை தடவி இரண்டு பாதைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் சுவையான வட பாவ் தயார்.

 
Exit mobile version