சுவையான குளிர்ச்சியான கேழ்வரகு கூழ் செய்வது எப்படி..?

 

பாரம்பரிய உணவான கேழ்வரகு கூழ் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம். அனைவரும் அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியாக சாப்பிட நினைப்போம். இதற்காக கடைக்கு சென்று குளிர்பானங்கள் வாங்கி அருந்துவோம். அதற்கு பதிலாக உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய குளிர்ச்சியான கேழ்வரகு கூழ் செய்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

 

கேழ்வரகு மாவு- 1 கப்

தயிர்- 1 கப்

 

சின்ன வெங்காயம்- 5

பச்சை மிளகாய்- 1

 

இஞ்சி- 1 சிறிய துண்டு

கருவேப்பிலை- சிறிதளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவினை எடுத்து கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளுங்கள்.

இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு தண்ணீர் சூடானதும், நாம் கலந்து வைத்துள்ள கேழ்வரகு மாவினை ஒரு முறை கரண்டியால் கலந்து விட்டு இதில் சேர்த்து கொள்ளுங்கள்.

பிறகு, இதனை 10 அல்லது 12 நிமிடம் வரை நன்றாக கலந்து விடுங்கள். இந்நிலையில் அடுப்பை ஆஃப் செய்து ஆறவைத்து விடுங்கள். இவை நன்றாக ஆறியதும், இந்த மாவில் தேவையான அளவு மாவை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது, இதனுடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டினை இடித்து சேர்த்து கொள்ளுங்கள். பிறகு, நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிது சிறிதாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு, இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதாவது குடிப்பதற்கு ஏற்றவாறு தண்ணீர் சேர்த்து கலந்து விடுங்கள். அவ்வளவு தாங்க, சுவையான குளிர்ச்சியான கேழ்வரகு கூழ் தயார்..!

 
Exit mobile version