
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள முத்துசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (24). உறவினர் நிலம் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு இருந்துவந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நிலப் பிரச்சினை தொடர்பாக நேற்றிரவு ராஜா, அதே பகுதியைச் சேர்ந்த ஹேமநாதன் (24), சோணைமுத்து (29) தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஹேமநாதன், சோணைமுத்து ஆகியோர் ராஜாவை கல்லால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழக்கரை காவல் துறையினர், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஹேமநாதன், சோணைமுத்துவை கைதுசெய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.