தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவு செய்யும் போது சொத்தின் புகைப்படங்களையும் இணைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, பத்திரப் பதிவுக்கு வரும் ஆவணங்களில் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுப்பதுடன், கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என பதியப் படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
