தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளுடன் வருவதற்கு 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் கொரோனா தொற்றில்லா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடுபிடி வீரர்கள், பார்வையாளர் என அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன், போட்டி நடைபெறும் 2 தினங்களுக்கு முன் எடுத்த தொற்றிலா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை காண அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக்கூடாது என்றும், உத்தரவுகளை மீறினால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட ஆட்சியர்களின் முன் அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என்றும், காளைகளை அவிழ்த்து விடப்படும் நேரத்திலிருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும் எனவும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்த செயல்களும் அனுமதிக்கப்படாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
