நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாக பேராலயத்தில் கிறிஸ்மஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழக மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரம் கணக்கானோர்பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படுவது மட்டுமின்ற பசலிக்கா அந்தஸ்து பெற்றது.
இப்பேராலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெறும்.
வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் விண்மீன் ஆலயம் அருகே உள்ள புனித சவேரியார் திடலில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நள்ளிரவு மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டன.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் உதவி பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
திருப்பலியின் நிறைவில், தேவதைகளாக வேடமிட்டிருந்த சிறுமிகள் அளித்த குழந்தை இயேசுவின் திருச்சொரூபத்தை, பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் பெற்றுக் கொண்டு, இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காட்சிப்படுத்தி, கிறிஸ்துமஸ் குடிலில் வைத்தார். அப்போது, பக்தர்கள் மண்டியிட்டு இறைப் புகழ்ச்சி வசனங்களுடன் வழிபாடு மேற்கொண்டனர்.
பேராலய நிர்வாகம் வாழ்த்துச் செய்தி அறிவித்தபோது, பக்தர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், பேராலய தியான மண்டபம் செல்லும் சாலையில் சுமார் 1கி.மீ நீளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் மற்றும் நுழைவாயில் வளைவு, கீழ் கோயிலுக்கு செல்லக்கூடிய பாதை, விண்மீன் ஆலயத்திற்கு செல்லக்கூடிய பாதை மற்றும் ஆலயத்தை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன
கிறிஸ்துமஸ் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.