தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 

தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓருசில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

 

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அவர், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளார்.

இன்று முதல் 18ம் தேதி வரை தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

 
 
 
Exit mobile version