பொங்கல் பரிசுத்தொகுப்பை மக்கள் பெறுவதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இன்றும் நாளையும் வீடுவீடாக சென்று டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்களுக்கு சிறப்பாக்கும் வகையில், தமிழக அரசால் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிக்கைக்காக, தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 2-ந்தேதி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் விநியோகம் இன்றும் நாளையும் நடைபெறும்.
சீனா, அமெரிக்கா போன்ற நாடுளில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா (பி.எப்.௭7) தொற்று இந்தியாவிலும் நுழைந்துள்ளது. எனவே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.