தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்த நிலையில், கோடை விடுமுறை விடப்பட்டன. வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி கோடை விடுமுறைக்கு பின்னர், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளியை திறப்பதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.