தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்துலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு-தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், 25ம் தேதி அன்று இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.