ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் 10 அணிகளுக்கு இடையே தொடங்கப்பட்டு, ரசிகர்கள் நிறைந்த அரங்கில் கோலாகலமாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.
70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 64 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அனைத்து லீக் போட்டிகளும் முடிந்த பிறகு, புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த வகையில், குஜராத் அணி 13 லீக் போட்டிகள் முடிவில் 18 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. மீதமுள்ள 3 இடத்திற்கு தான் தற்போது கடுமையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், பிளே சுற்றுகளின் முதல் 2 போட்டிகள் வரும் மே 23 மற்றும் 24ம் தேதிகளில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால், சென்னையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது இந்த பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது, இன்று (மே 18) மதியம் 12 மணி அளவில் பிளே ஆப் சுற்றுக்கான முதல் போட்டியின் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் இந்த டிக்கெட்டுகள் Paytm மற்றும் Paytm Insider போன்ற இணையத்தில் இன்று விற்பனைக்கு வர உள்ளது.