மனைவி ஏமாற்றியதால் பிற பெண்களை கொலை செய்தவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த காவாலா ஆனந்தையா என்பவர் தனது மனைவி வெங்கடம்மாவை காணவில்லை என ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஜனவரி 1ஆம் தேதி புகார் அளித்தார். பின்னர், ஜனவரி 4ஆம் தேதியன்று அவரது மனைவியின் உடல் அன்குஷ்புர் கிராமத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கத்கேசார் காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளி ராமுலு உடல் உறவுக்காக வெங்கடம்மாவை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. மதுபோதையில் இருந்த ராமுலு, வெங்கடம்மாவை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
மேலும் அவர் சைபராபாத் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாலா நகர் பகுதியில் டிசம்பர் 10ஆம் தேதி மற்றொரு பெண்ணை கடத்திச்சென்று கொலை செய்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணை அவருடைய புடவையை வைத்தே கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்து தப்பிச் சென்றார்.
இந்தக் கொலைகளைச் செய்வது யார்? என்பதை கண்டுபிடிக்க ஹைதராபாத் வடக்கு பகுதி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அதில், அந்த நபர் சங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த மைனா ராமுலு( 45 ) என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்பே 2003 – 2019 இடைபட்ட காலத்தில் ராமுலு 16 கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின்னர் 2011, டிசம்பர் 12ஆம் தேதியன்று சிகிச்சைக்காக சிறையிலிருந்து எர்ரகட்டா மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சக குற்றவாளிகளுடன் சேர்ந்து தப்பித்துச் சென்றார். பின்னர் வெளியே சென்ற ராமுலு மேலும் ஐந்து கொலைகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் 2018ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஹைதராபாத் போரபண்டா பகுதியில் பதுங்கியிருந்த ராமுலுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் ஏன் தொடர் கொலைகளில் ஈடுபட்டார் என்பதற்கான காரணத்தை அறிய அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்ட ராமுலுவின் மனைவி வேறொருவருடன் சென்றுவிட்டதால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாததால் ராமுலுவுக்கு பெண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் திருமணத்திற்கு பிறகு திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களை கடத்திச்சென்று கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ஆரம்பத்திலிருந்தே ராமுலுவின் இதேபோலத்தான் இருந்துள்ளார். அவர் மனநிலையில் தற்போதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.