நாடாளுமன்ற தேர்தல் 2024: 88 தொகுதிகளுக்கு இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு!

 

நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின.

 

இந்நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. அந்தவகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரப்பிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கர் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்படும்.

 

இந்த தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக அந்தந்த மாநில போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
 
Exit mobile version