ஆரோக்கியம் நிறைந்த சிவப்பரிசி கஞ்சி செய்வது எப்படி?..
மென்று சாப்பிட முடியாதவர்கள், விழுங்க முடியாதவர்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் உடல்நலமில்லாதவர்கள் மட்டுமே கஞ்சியைச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்களும் கஞ்சியை அருந்தலாம். ரிலாக்ஸ் டைமில் சத்தான இந்த சிவப்பரிசி கஞ்சியை அருந்தினால் உடனடி எனர்ஜி கிடைக்கும்.
செய்முறை
வெறும் வாணலியில் 100 கிராம் சிவப்பரிசியை லேசாக வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் ரவையாக உடைத்தெடுக்கவும். ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு தலா அரை டீஸ்பூன் வெந்தயம், சீரகம் தாளிக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, வெங்காயம் ஒன்று, தக்காளி ஒன்று சேர்த்து வதக்கவும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் அரிசி ரவை, பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து இரண்டு டீஸ்பூன் தேங்காய்த் துருவல், சிறிதளவு மல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும். விரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்
சிறப்பு
இந்தக் கஞ்சியில் வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. வயிற்று கோளாறு, வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற்றும் சத்தான கஞ்சி இது.