நெல்லிக்காய் தரும் அற்புத பலன்கள்!

 

கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் விரைவாக நீர் சத்து குறைந்து பித்தம் அதிகரிக்கிறது. இதனால் உடலில் வறட்சி ஏற்படுகிறது. உள் உறுப்புகளில் வறட்சி ஏற்படுகிறது. இதனால் மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படுகிற நிலை உருவாகிறது. இது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு எலுமிச்சை, நெல்லி போன்றவை மிகச் சிறந்த தீர்வுகளை அளிக்கின்றன.

எலுமிச்சை தோல்களை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சம அளவு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிதளவு ஜாதிக்காய் பொடியை சேர்க்க வேண்டும். இதை சுமார் ஏழு நாட்களுக்கு வெயிலில் வைக்க வேண்டும். பாத்திரத்தின் வாயை வெள்ளை துணியால் கட்டி வைக்க வேண்டும். அவ்வப்போது கைபடாமல் இந்த கலவையை கிளறிவிட வேண்டும்.

 

இதன் மூலம் பனங்கற்கண்டு நன்றாக கரைந்து எலுமிச்சை தோலுடன் கலந்திருக்கும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும். இதன் மூலம் வெயில் காலத்தில் ஏற்படும் பித்தம் குறையும். வயிறு தொடர்பான பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்கும். அடுத்தபடியாக எலுமிச்சை தோலை பயன்படுத்தி வெயில் காலத்தில் தோலில் ஏற்படும் கருமை நிறத்தை போக்குவது தொடர்பான மருந்தை தயார் செய்யலாம்.

எலுமிச்சை பழத்தை நன்றாக பிழிந்து எடுத்து விட்டு அதன் தோலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்ததும் அதை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு எலுமிச்சை தோல் பொடியை எடுத்துக் கொண்டு அதனுடன் தயிர் சேர்க்க வேண்டும். இந்த கலவையை தோலில் பூசியிருந்து 15 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும்.

 

பின்னர் இதை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வெயிலால் ஏற்பட்ட கருமை நிறம் மாறும். அதே போல் நெல்லிக்காயை பயன்படுத்தி கோடை காலத்தில் ஏற்படும் பித்தத்தை சமன் படுத்தும் மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். பொடியாக நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகள், ஜாதிக்காய் பொடி, தேன், சுக்கு பொடி. நறுக்கி வைத்த நெல்லிக்காய் துண்டுகளுடன் சிறிதளவு சுக்கு பொடி சேர்க்க வேண்டும்.

சிறிதளவு ஜாதிக்காய் பொடி சேர்க்க வேண்டும். தேவையான அளவு தேன் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கிளற வேண்டும். பாத்திரத்தை வெள்ளை துணியால் மூடி 7 நாட்களுக்கு வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் தேன் நன்றாக நெல்லிக்காயுடன் கலக்கும். இதை தினமும் காலையில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் கோடை காலத்தில் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

 
 
Exit mobile version