ருசியாக காளான் பிரியாணி செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களை பாராட்டுவார்கள். அதை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்:
பாஸ்மதி அரிசி – 1 கப்
காளான் – 200 கிராம்
தக்காளி – 1
தயிர் – 2 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க:
பட்டை – ஒரு இன்ச் அளவு
கிராம்பு – 3
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு பற்கள் – 15
மல்லித்தழை – சிறிது
புதினா – சிறிது
தேங்காய் பால் எடுக்க:
தேங்காய் துருவல் – 1/2 கப்
தாளிக்க:
நெய் – 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
பட்டை – 1 இன்ச் அளவு
கிராம்பு – 2
பிரிஞ்சி இலை – 1
பெரிய வெங்காயம் – 1
செய்முறை:
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து வைத்துக்கொள்ளவும். காளானை நன்கு கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து 2 கப் அளவுக்கு தேங்காய் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
காளான், வெங்காயம்,தக்காளி மூன்றையும் வெட்டி வைக்கவும். பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பற்கள், மல்லித்தழை, புதினா எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காளானுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், பிரியாணி மசாலா தூள், தயிர் அரைத்து வைத்துள்ள கலவை எல்லாவற்றையும் கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து நன்றாக கிளறி 2 கப் தேங்காய் பாலை ஊற்றவும். தேங்காய் பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடவும். 5 நிமிடம் கழித்து ஒரு தடவை லேசாக கிளறி விடவும். அரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் பிரியாணி ரெடி.