அருமையான சுவையில் இனிப்பு சோமாஸ் செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
ரவை – 1/2 கிலோ
மைதா – 1/2 கிலோ
பூரணம் செய்ய
நிலக்கடலை – 100 கிராம்
பொட்டுக்கடலை – 100 கிராம்
வெல்லம் – 1/4 கிலோ ஏலக்காய் – 5 (பொடி செய்தது)
எண்ணெய் – 1/2 லிட்டர்
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையை தனியே மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்து அதனுடன் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள நிலக்கடலை, பொட்டுக்கடலை, ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது பூரணம் தயார். அடுப்பில் வாணலியை வைத்து ரவையை கொட்டி லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் 1 முதல் 2 தேக்கரண்டி கலந்து வைத்துள்ள பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும்.
ஓரங்களை அழகு பட வெட்டவும். வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் ஒட்டி வைத்துள்ள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். அருமையான ருசியில் இனிப்பு சோமாஸ் தயார்.