ராகி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்குகிறது. அத்தகைய ராகியை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் ராகியைக் கொண்டு ராகி தோசை, ராகி புட்டு, ராகி உப்புமா, ராகி பூரி போன்றவை செய்யலாம். இப்போது இந்த ருசியான ராகி பூரி எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1/2 கப்
கோதுமை மாவு – 1/2 கப்
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
லேசாக சூடு படுத்திய தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.
அடுப்பில் கடாயயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூரிகளை ஒவொன்றாக போட்டு எடுக்கவும்.
இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும். ருசியான ராகி பூரி தயார்..!
குறிப்புகள்:
எண்ணெய் நல்ல சூடாக இருக்க வேண்டும். எண்ணெய் சூடாகும் முன் பூரியைப் போட்டால் உப்பி வராது.
மாவை பிசைந்து அதிக நேரம் வைத்தால் எண்ணெயை அதிகமாக உறிஞ்சி விடும்.